வருக வணக்கம்! <<<<< நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

Wednesday, October 15, 2008

போகர் ஏழாயிரம்


போகர் ஏழாயிரம் என்றொரு நூல். சித்தர் போகர் எழுதியதாகக் கூறப்படுவது. அந்த நூலைப் பற்றிய அறிமுகம், விமரிசனம் முதலியவற்றை இன்னொரு முறை சொல்கிறேன்.

ஏழாயிரம் பாடல்கள் அல்லவா! விமரிசனம் என்பது சும்மா இல்லையே!

அந்த ஏழாயிரத்தில் எவ்வளவோ அபூர்வமான விசயங்கள் ஒளிந்திருக்கும். போகரின் வழக்கம் ஒரு தினுசு. ஏதாவது ஒரு பொருளைப் பற்றி விலாவாரியாகச் சொல்லிக்கொண்டே வருவார். திடீரென்று வேறு ஏதாவது ஒரு சிறு வரலாறு, சம்பவம், கதை
அதில் குறிக்கிடும். வரிசையாகப் படித்துக்கொண்டே வந்தால்தான் அந்த மாதிரி நடுப்பட்ட இடைப்பட்ட விசயங்களெல்லாம் தட்டுப்படும். தட்டுப்பட்டாலும் கூட அந்த பாடல் என்ன சொல்கிறது என்பது எளிதில் மட்டுப்படாது.

பல விடயங்களைக் குறித்து வைக்காமல் விட்டு விட்டேன். அவற்றையெல்லாம். இப்போது தேடுவது என்பது மிகச் சிரமமான செயல். நினைவில் அந்த விடயம் இருக்கும். ஆனால் அது எங்கிருந்து வந்தது என்பதோ அதன் தொடர்புகளோ தெரியாமலிருக்கும். ஒரு
சிறு லாரி நிறைய அடைத்துக்கொள்ளும் அளவுக்குக் எழுதிவைத்த குறிப்புகள் இப்போது இருக்கின்றன என்றால் எழுதாமல் விடுபட்டுப்போனது இன்னும் எவ்வளவு இருக்குமோ? நான் வாழ்க்கையில் மிகவும் regret செய்யும் விஷயங்களில் இதுவும் ஒன்று. போகர் ஏழாயிரத்தில் உள்ள விந்தையான குறிப்பொன்றுடன் முதலில் தொடங்குவோம்.

இந்தக் கதை எப்போது நடந்தது எனது தெரியாது. நடந்த இடம் கபாட புரம். அதாவது இரண்டாவது தமிழ்ச்சங்கம் நடந்த சமயம். அச்சங்கத்தில் அகத்தியருடைய சீடராகிய 'திரணதூமாக்கினி முனி' என்னும் தொல்காப்பியரும் இருந்தார். (நான் போகர் ஏழாயிரத்திலுள்ள கதையைத்தான் சொல்கிறேன். 'திரணதூமாக்கினி இது அது', என்று என்னைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கப்படாது.)

தொல்காப்பியருக்குத் தலைவலி. பத்தாண்டு காலம் இடைவிடாது தொடர்ந்து தலைவலி. எத்தனையோ வைத்தியர்கள் முயன்றும்கூட அந்தத் தலைவலி தீரவில்லை. அகத்தியரை நினைத்தார்கள். அவரும் வந்தார். அவருடைய ஞானதிருட்டியில் பார்த்தார். காரணம் புலப்பட்டு
விட்டது.

கட யோகியரிடம் ஒரு பயிற்சியுண்டு. தண்ணீரை ஒரு நாசித் துவாரத்தில் ஏற்றி கபாலத்தில் உள்ள அறைகளிலெல்லாம் செலுத்திவிட்டு இன்னொரு நாசித்துவாரத்தின் வழியாக வெளியே விடுவார்கள். இந்தப் பயிற்சிக்கு ஓர் உபயோகத்தை வைத்திருக்கிறேன். சாப்பிடும்போது புரையேறும். அவ்வாறு புரையேறும்போது தும்மல் வரும். அப்போது உணவுத் துகள்கள் நாசியின் உட்புறத்தில் மேலே சென்றுவிடும். மசாலா கிசாலா சமாச்சாரமாக இருந்தால் அதுவேறு தொல்லை படுத்தும். அதனை flush out செய்து வெளியேற்றுவதற்காக வலது நாசியின் மூலம் தண்ணீரை இழுத்து மேலே கொண்டு சென்று சற்று வைத்திருந்துவிட்டு, அதனை வேகமாக வெளியேற்றிவிடுவேன். மூன்று முறையாவது இவ்வாறு செய்துவிடுவேன். சரியாகிவிடும் - இதுவரை. (பயிற்சியற்றவர்கள் இதனைச் செய்து பார்க்கவேண்டாம். ஆபத்து).

அந்த மாதிரி பயிற்சியெல்லாம் தொல்காப்பியருக்கு அத்துப்படி ஒருமுறை அவர் நாசியின் வழியாக இழுத்த தண்ணீரில் தேரை முட்டை இருந்திருக்கிறது. ஆலவிதையை 'சிறுமீன் சினையினும் நுண்ணிதேயாயினும்' என்று பழைய நீதி நூல் சொல்கிறது. தேரை முட்டை அதனினும் நுண்ணிது. ஆகவே நாசித்துவாரத்தின் வழியாக மூளைக்குச் சென்றுவிட்டது. இப்போது இருக்கும் அனாட்டமி நூலின்படி ஏதாவது ஸைனஸிற்குள் நுழையலாம் என்று சொல்லலாம். ஆனால் கடயோகியர்களின் கபாலம் எப்படியிருக்கும் என்று சொல்லமுடியாது.

ஏதாவது பயிற்சியின் மூலம் எதையாவது வாசலைத் திறந்துவைத்திருப்பார்கள்.

"சிக்குள்ள வாசல் திறந்ததடி; சிலம்பொலிதானும்தான் கேட்டதடி",

என்று காணாக்கண் கேளாச்செவி மூலம் காணமுடியாக் காட்சி, கேட்க முடியா ஓசையை உணர்ந்துகொண்டு பாடிக்கொண்டிருப்பார்கள். அந்த முட்டையிலிருந்து தவளை வெளிவந்து பெரியதாகிவிட்டது. அதுதான் அப்படியரு தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருந்தது.

தம்முடைய ஞானதிருட்டியினால் இதனை உணர்ந்துகொண்ட அகத்தியர், அறுவை சிகிச்சை செய்து தேரையை எடுக்கத் தீர்மானித்தார். அதனைப் பாண்டிய மன்னனின் பிரத்தியேக மருத்துவசாலையில் செய்தார்கள். தொல்காப்பியரின் தலையில் கபாலத்தைத் திறந்து
மூளையைக் கீறிப் பார்த்தார்கள். அங்கே ஒரு தேரை மூளையைப் பற்றியவாறு இருந்தது.

"எப்படி கபாலத்துக்குள்ளிருந்துகொண்டு பத்தாண்டுகள் ஜீவித்திருந்தது?"......என்று என்னிடம் கேட்பதில் பிரயோசனமில்லை. அந்த சித்தை அறியவேண்டுமானால் 'கல்லினுள் தேரை'யையும் 'கருப்பை உயிரை'யும்தான் கேட்கவேண்டும். அவற்றுக்குப் புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன் தான் அந்த காலத்துள் தேரைக்கும் கொடுத்து வாழ்வித்திருக்கவேண்டும். அந்தத் தேரையை அகத்தியர் குறடால் எடுக்க முயன்றார்.
அதனை பார்த்துக்கொண்டிருந்த சீடர்களில் ஒருவராகிய பொன்னரங்கன் என்பவர் தடுத்தார். அப்படியே தேரையை எடுத்தால் அது மூளையைப் பிய்த்துக்கொண்டு வந்துவிடும்.

ஆகவே பொன்னரங்கனார் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் செய்தார். அந்தப் பாத்திரத்தைத் தேரையின் அருகே பிடித்தார். தண்ணீரைக் கண்ட தேரை உடனே மூளையை விட்டுவிட்டு தண்ணீருக்குப் பாய்ந்தது. தொல்காப்பியரின் மூளைக்குச் சேதமில்லாமல் கபாலத்தை மூடிவிட்டார்கள். சமயோசிதமாக உத்தியைச் சொன்ன பொன்னரங்கனாரை அகத்தியர் பாராட்டினார். அத்துடன் அவருக்குச் சிறப்புப் பெயராக 'தேரையர்' என்னும் பெயரும் ஏற்பட்டது. தேரையர் பெயரால் பல வைத்திய நூல்கள் இருக்கின்றன. சரி. போகர் ஏழாயிரத்துக்கு வருவோம்:

இட்டாரே சங்கத்துப் புலவர் எல்லாம்
எழிலான திரணாக்கிய முனிவர் நோயை
சட்டமுடன் தச வருட காலமையா
தலைவலியும் சன்னியுடன் அதிகமுண்டு
தொட்டவொரு பண்டிதங்கள் மெத்த உண்டு
துரைராஜ சுந்தர்க்கு இலக்கோ இல்லை
திட்டமுடன் தங்களது பண்டிதங்கள்
திறமுடனே செய்வதற்கு வருந்திட்டாரே

வருந்தவே அகத்திய முனிவர்தாமும்
வல்லமையால் பண்டிதங்கள் மிக உரைப்பார்
பொருந்தியே தேரையது மூளைதன்னை
பொலிவான நாசிவழி தன்னில் சென்று
வருந்தியே மூளைதன்னைப் பற்றியல்லோ
வாகுடனே தேரையது பொருந்தி நிற்க
மருந்தீய சிவனை தன்னை மனத்திலுன்னி
மகத்தான அகத்தியரும் கவனித்தாரே

கவனிக்கும் வேளையிலே கத்தி கொண்டு
கருத்துடனே மூளைதனைக் கீறிப்பார்க்க
மவுனமென்ற மூளைதன்னில் தேரை தானும்
மார்க்கமுடன் கவ்வியல்லோ கொண்டு நிற்க
புவனமென்ற குறடாவால் எடுக்கப்போனார்
புகழான தேரையர் முனிவர் தாமும்
சவனமென்ற பாணியினால் எடுக்கத் தந்த்ரம்
சாற்றினார் தேரையர்தாம் சாற்றினரே

சாற்றவே மண்பாண்டம் தன்னில் தானும்
தன்மையுள்ள சலமதனை நிறைய விட்டு
ஆற்றலுடன் தேரைமுன்னே எதிரே காட்ட
அங்கெனவே மூளைவிட்டு குதிக்கலாச்சே
நாற்றிசையும் மேவு புகழ் அகத்தியனார்தாம்
நல்லறிவு கண்டுமல்லோ மனமுவந்து
"போற்றியே என் சீடா, பொன்னரங்கா
பொலிவான தெள்ளமிர்த சிங்கமாமே?"

போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையை செய்ததே மிகசுவையான தகவலாகும். அகத்திய முனிவருக்கும், போகருக்கும் தொழில் ரீதியாக போட்டியிருந்துவந்தது. அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம்,வில்லை போன்று மருந்துகள் அளித்து நோயை குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்துவந்தார். அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தை பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்ததாக பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.

காயசித்தி உடல் பெற


உடல் ஆரோக்கியத்தை நூற்றுக்கு நூறு சதவீதம் காக்க கீரைகள் மற்றும் காய்கறிகள் போதும். அவற்றோடு தேவையான உப்பும் சேரும்போது அங்கே ஆரோக்கியத்திற்குக் குறைவே இருக்காது. உங்களுக்கு உதவும் வகையில் சில கீரைகள், காய்கறிகள், மற்றும் உப்பு பற்றிய விளக்கம் இங்கே இடம் பெற்றுள்ளது.

காயசித்தி :
உடல் வளத்தைப் பெருக்கி பொன்நிற மேனியைக் கொடுத்து மன்மதனாக்கவல்ல மகோன்னத சக்தி மறைந்துள்ள கீரை மஞ்சள் பூ கரிசலாங்கண்ணியாகும். விழிக்கு ஒளியைப்பெருக்கிக் கொடுத்து, சிந்திக்கும் திறத்தைக் கூட்டிக் கொடுத்து அறிவாளியாக அரங்கேற்றி அழகு பார்க்கும் அற்புத மூலிகை. மஞ்சள்காமாலை, குன்மக்கட்டி போன்ற நோய்களை விரட்டியடித்து விடும். மொத்தத்தில் இது ஒரு காயகல்பம். எனவேதான் வடலூரார், இந்தக் கீரைக்கு ‘காயசித்தி’ என வாய்மொழிந்தார்.

தூதுவளை :
செவிமந்தம், செவி அழற்சி, காசம், உடல் நமைச்சல், மதரோகம், திரிகோஷம், உட்குத்தல், விந்து தானாகப் பிரிதல், இருமல், மூச்சுத்திணறல், கோழைகட்டுதல் ஆகியவற்றை வேரோடு கிள்ளி எறிந்து விடும். வெற்றியையே அள்ளித்தரும் அற்புதத் தமிழ்மூலிகை. அகத்தியரும் வள்ளலாரும் இதை ‘கபநாசினி’ என்று போற்றினர்.

பொன்னாங்கண்ணி:
விழியைப் பற்றிய வாதகாசம், பார்வையில் தடுமாற்றம், பக்கவாதம், மூலச்சூடு, ரோகம், பிலிகம் சொறிசிரங்கு, தேமல் போன்ற நோய்களைத் தடுத்து நிறுத்திடும். நோய்கள் கண்டால் இக்கீரையைத் தொடர்ந்து 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் பஞ்சாய்ப் பறந்து போகும். கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து தேக உஷ்ணத்தைச் சீராக வைத்திருக்கும்.

புளியாரை:
பித்தம்_மயக்கம்_தலைச்சுற்றல் மூலவாயு_வயிற்றுப்போக்கு பேதிவாந்தி இவற்றை நமது உடலைத்தீண்ட விடாது எதிர்த்து நிற்கும் ஓர் அற்புதக்கீரை. ரத்தத்தைச் சுத்தி செய்து கொடுக்கும் வல்லமை நிறையவே உண்டு. எனவே சித்தர் பெருமக்கள் ‘காயசித்தி’ ‘பித்தமார்த்தினி’ எனப் பாராட்டினார்கள்.

முருங்கைகீரை:
உடலில் உண்டாகும் வெப்பத்தின் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கவல்ல கீரை. குறிப்பாக ஆண்களுக்கு விந்தினைப் பெருக்கிக் கொடுக்க வல்ல வீரியம் நிறையவே இக்கீரைக்கு உண்டு. எனவேதான் தமிழ் மூலிகை மருத்துவம் இக்கீரையை ‘விந்து கட்டி’ எனப் பேசுகிறது.

பசளி:
சிறுநீர்க் கோளாறுகள், மூத்திரக்கடுப்பு, வாந்தி, மூத்திரக்காய்கள் கோளாறு இவற்றைக் களையவல்ல அற்புத மருத்துவ சஞ்சீவி. கால்சியம், பாஸ்பரஸ். சோடியம் குளோரின் வைட்டமின் ஏ.பி.சி.; புரதம் வெஜிடபிள் ஹீமோகுளோபின் அமீன் ஆசிட் போன்ற கணக்கற்ற ஊட்டச்சத்துக்களை ஒருசேர உள்வாங்கிக் கொண்ட கீரைகளில் அரசன். மொத்தத்தில் இது ஒரு தங்க பஸ்பம். முறையாக உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் ‘சிறுநீரகக் கோளாறு’ உங்களைச் சீண்டிப் பார்க்கவே அச்சப்பட்டு வெளியே நின்று தன்னைத்தானே விலங்கிட்டுக் கொள்ளும். இது சத்தியம்.

காய்கறிகளைவிட கீரைகளில் பசுமைச்சத்து இருப்பதால் பல்வேறு நன்மைகள் வந்தடைகின்றன. இதில் உள்ள தாதுப் பொருள்கள் பெரும்பாலும் காரத்தன்மை உடையவை. இதனால் நமது உடலில் சேரும் கழிவுப்பொருள்களை வெளியேற்றிட ஒரு உந்துசக்தியாக இருக்கிறது.

காய்கறிகள்:
அவரை, முருங்கை, தூதுவளங்காய், அத்திக்காய், முள்ளிக்காய், வாழைக்காய், வாழைப்பூ, பேயன், வாழைத்தண்டு, கொத்தவரைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், வெள்ளைப் பூசணிக்காய், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பச்சைப்பட்டாணி, தக்காளி வெள்ளரிக்காய் போன்ற காய்களை மூடிய பாத்திரத்தில் மிதமாக வேகவைத்து சாப்பிடுவது நல்லது. மேற்கண்ட காய்கறிகள் சிலவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளில்தான் நார்ப்பொருள்கள் அதிகமாக உள்ளன. வெள்ளரிக்காய் கோடைக் காலத்திற்கு உகந்தது. நமது வயிற்றில் உண்டாகின்ற புளிப்புத் தன்மையைக் கட்டுப்படுத்தும் சக்தியை வெள்ளரி தனக்குள்ளே சேமித்து வைத்திருக்கிறது.

காரத்தன்மையால் உடலில் உண்டாகின்ற, புளிப்புத் தன்மையால் உண்டாகின்ற அசுத்தப் பொருள்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்த உயிர் அணுக்களை உற்பத்தி செய்கின்ற உந்து சக்தி உள்ளது. ரத்த உயிரணுக்களின் சேர்க்கையில் மிக அதிகமாகஉள்ள உப்புப்பொருளான பொட்டாசியம் குளோரைடு பொட்டாசியம் பாஸ்பேட் அதிகமாக உள்ள ஓர் அற்புதமான காய் வெள்ளரிக்காய்.

நாம் உட்கொள்ளும் Methionine புரதம் உடலில் Homocy Stein என்ற நஞ்சாக மாறுகின்றது. இந்த விஷப் பொருள் உடலின் இருதயத்துடிப்பையும் இருதயத்தையும் பெரிதும் பாதிப்பதாகக் கண்டறிந்துள்ளனர். இந்த ஹோமோசிஸ்டின் என்ற நச்சுப் பொருளை வெளியேற்றும் சக்திவைட்டமின் ‘‘பி6’’_ல் உள்ளது என அறிவியல் அறிவித்துள்ளது. இத்தகைய சக்தி அதிகமாக உள்ள பேயன் வாழைப்பழம், ரஸ்தாளிப்பழம் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், மாதுளை, பேரீச்சை இவற்றை உண்பது உத்தமம்.

மாங்காய், கொய்யா, பலாப்பழம் இவற்றை வெகுவாகக் குறைத்துக் கொள்வது நல்லது. பால், பலா, மாம்பழம், மீன், கோழி இவை ஒன்றுக்கொன்று எதிர்மறை சக்திகளை உருவாக்கும் முரண்பாடுகள் கொண்டவை. பேதி வாந்தி சிலநேரங்களில் உயிருக்குக் கூட கேடு வந்து சேரலாம். இவற்றை ஒன்றோடு ஒன்று சேர உதவிடாதீர்கள். எச்சரிக்கைமிக தேவை.

கேரட், பீட்ரூட், டர்னிப், நூக்கல், உருளைக்கிழங்கு இவற்றைச் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை. கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு தவிர்ப்பது நல்லது.

சுண்டக்கடலை, தட்டப்பயிறு, மொச்சைப் பயிறு, இவற்றைச் சிறிதளவாக வாரத்திற்கு ஒருமுறை பகல் பொழுதில் சேர்த்துக் கொள்வது தவறு இல்லை.

நிலக்கடலை, முந்திரி, பாதம், பிஸ்தா பருப்பு, சாரப்பருப்பு வகைகளில் கொழுப்புச்சத்து விஞ்சி இருப்பதால் தனியாகச் சாப்பிடக்கூடாது. மாதத்திற்கு இருமுறை ஏதாவது உணவோடு கலந்து சிறிய அளவே உண்ணவேண்டும்.

முளைகட்டின துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு, ஜீரகம், வெந்தயம், இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதில் தவறு இல்லை.

பசுவின் தயிர், மோர், நெய் சேர்த்துக்கொள்வதில் தண்ணீர் கலந்த மோர் சிறப்பானது.

கடையிலே விற்கப்படுகின்ற ஊறுகாய்வகைகளை ஒதுக்குங்கள் வீட்டிலேயே காரம் எண்ணெய் அதிகம் சேர்க்காது, உப்பு மிகமிகக் குறைவாகச் சேர்த்து தயாரித்துக் கொள்வது உத்தமம். எலுமிச்சை, நார்த்தங்காய், பூண்டு, நெல்லிக்காய், மாஇஞ்சி, பச்சைமிளகு மாவல்லிக்கிழங்கு (நன்னாரி), இவை உங்களது ஊறுகாய்களுக்கு மூலப் பொருளாக இருத்தல் அவசியம்.

உப்பு:
நாம் சாப்பிடுகின்ற எல்லா உணவு வகைகளிலேயும் ‘உப்பு’ வஞ்சனை இல்லாமல் நமக்கு சுவையைக் கூட்டிக்கொடுத்து மறைமுகமாக ‘நஞ்சினை’ உடலுக்குள் கூட்டி வருகிறதை நாம் மறந்து விடக்கூடாது. ‘உப்பே தப்பு’ என்பார்கள் தமிழ் மூலிகை மருத்துவர்கள். உப்பு என்று நாம் பொதுவாகச் சொல்வது கடல் உப்பே. உப்பில் சோடியம் குளோரைடு வெகுவாக உள்ளது. உங்கள் உடலில் ஏதாவது ரத்தக்காயம் ஏற்பட்டால் அதில் கொஞ்சம் உப்பை வைத்துப்பாருங்கள். தாங்க முடியாத எரிச்சல் இருக்கும். அந்த அளவிற்கு வீரிய சக்தி கொடுக்க வல்லது உப்பு. இந்த மாற்றமே நமது குடலிலேயும் உப்பை அதிகமாகச் சேர்த்துக்கொள்கின்ற போது ஏற்படுகின்றது.

ஆனால், இந்த உபாதையை நம்மால் உணர இயல முடியவில்லை. காரணம், நமது நாக்கின் ருசியே அந்த எரிச்சலை அரண் போட்டு உணரவிடாது தடுத்துவிடுகிறது. உதாரணத்திற்கு ஒன்று சொல்கின்றேன். நீங்கள் சாப்பிடுகின்ற 1 கிராம் உப்பின் எரிச்சலைப் போக்க 70 கிராம் தண்ணீர் குடித்தால் தான் உப்பின் நஞ்சுத் தன்மையைப் போக்க இயலும் என மேலை நாட்டு மருத்துவக் குறிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உப்பு அதிகமாகச் சேர்த்துக் கொள்வதால் உடலின் எடை கூடுகிறது. உப்பே இல்லாது உணவை உட்கொள்ளப் பழக்கிக் கொள்வது நல்லது. துவக்கத்திலே உங்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும் உங்கள் உடலின் பகுதிகளில் சிறுநீரகத்தில் தான் உப்பு தேக்கமாகிறது. அதை நாம் குடிக்கின்ற தண்ணீராலேயே அன்றாடம் வெளியேற்றுகின்றோம். உடலில் உப்புச்சத்துக் குறையக் குறைய உங்களது எடையும் சீராகவே இருக்கும்.

கடற்கரைச் சாலைகளில் உள்ள வானுயர்ந்த கற்கோட்டைகள் எல்லாமே அரித்து அரித்து உதிர்வதைப் பார்க்கின்றோம். கற்கோட்டைகளையே அரித்து விடுகின்ற உப்பு உங்களது உடலை விட்டு வைக்குமா? சிந்தித்துப் பாருங்கள்.

நம்மில் பலர் உப்பில்லா உணவு நமது நினைவாற்றலைக் குறைக்கும் என்று தப்புக் கணக்குப் போடுகின்றனர். இது தவறு. உப்பு உங்களது சிறுநீரகத்தை இயங்காது தடுத்து விடுவதோடு, மூளை வளர்ச்சியையும் பெரிதும் பாதிப்படையச் செய்து விடுகிறது.

ஆங்கில மருத்துவம் இந்த வகையில் நம்மைக் குழம்புகிறது. சில நேரங்களில் உப்பு தேவை என வாதிடுகிறது. இரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் சுவடு தெரிந்துவிட்டால் உப்பை நிறுத்துங்கள் என சிவப்புவிளக்கை கையிலே தூக்கிப் பிடிக்கிறது. ஒரு கையிலே பச்சை விளக்கையும் மற்றோர் கையில் சிவப்புக் கொடியையும் பிடித்து நம்மை குழப்புகிறது.

உப்பின் அறிவியல் பெயர் சோடியம் குளோரைடு. மனித உடல் வளர்ச்சிக்கு இரும்பு பொட்டாஷ், கந்தகம், கால்சியம் தேவைதான் உப்பை மனிதனால் ஜீரணிக்க இயலாது. உப்பை உண்பதால் மனிதனது சிறுநீரகம், கல்லீரல், இதயம், இரத்தக் குழாய்கள், மூளை வெகுவாக பாதிக்கப்படுகின்றன என அமெரிக்க மருத்துவர் பால் பேக்கர் தெரிவிக்கின்றார்.

உப்பு சாப்பிடுவதால் நரம்புகளில் எரிச்சலை உண்டாக்குகிறது. நமது உடலில் உள்ள கால்சியத்தைத் திருடி பற்களையும் எலும்புகளையும் சக்தி இழக்கச் செய்துவிடுகிறது. நமது குடலில் உள்ள லேசான சவ்வுகளை அரித்து குடற்புண் பிராங்கைடிஸ் போன்ற நோய்களை மிகச் சுலபமாக பதியவைக்கிறது இந்தப் பொல்லாத உப்பு. எனவே இன்றிலிருந்து உப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து முற்றிலும் அகற்ற முயற்சி செய்யுங்கள்.

சரி உப்பு வேண்டாம். நமது உடலுக்கு உப்புச் சத்து வேண்டாமா? என்று நீங்கள் இதழ் மூடி முணுமுணுப்பது தெரிகிறது. உப்புச் சத்துக்கள் உள்ள இயற்கை உணவுகளை உண்பதில் தவறில்லை. நமக்காகவே நமது சித்தர்களும் மேலைநாட்டு மருத்துவமும் வாய் மொழிந்தவை இதோ!

மூளைக்கீரை, வாழைத்தண்டு, கீரைத்தண்டு, முள்ளங்கி, காரட், சௌசௌ, வெண்பூசணி, வெங்காயக்கீரை, முட்டைக்கோஸ் நூல்கோல் வெள்ளரிப்பிஞ்சு, நுங்கு, ஆப்பிள், திராட்சை, வெங்காயம், பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய் போன்றவற்றை உணவோடு சேர்த்துக் கொண்டால் நமக்கு கிடைத்துவிடுகிறது. உங்கள் நலத்திற்குத் தேவையான உப்பு சத்து இயற்கை உணவிலேயே உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். சுகமான வாழ்வுக்கே நீங்கள் சொந்தக்காரர் ஆவீர்கள்.

இஞ்சி லேகியம்


வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கு நல்ல மருந்து பித்தத்திற்கும் நல்ல மருந்து

தேவையான பொருட்கள்

துளிர் இஞ்சி - 1 கப்
உலர்ந்த திராட்சை - 15 கிராம்
பாதாம் பருப்பு - 20
ஏலக்காய் - 5
நெய் - 1/4 கப்
சீனா கல்கண்டு - 50 கிராம்
வெல்லம் - 1/2 கப்
செய்முறை

இஞ்சியை தோல் சீவி வெட்டி 1/2 கப் தண்ணீர் சேர்த்து வடிகட்டி சிறிது நேரம் வைக்கவும்.
தெளிந்ததும் மேலாக எடுத்து அதில் திராட்சை, பாதாம் பருப்பு, ஏலக்காய் சேர்த்து அரைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு அரைத்த விழுது, நெய், வெல்லம் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கி காற்று புகாத ஜாடியில் போட்டு மூடி வைக்கவும்.

குங்குமப்பூ லேகியம்





தேவையான பொருட்கள்

பன்னீர் ரோஜா - 700 கிராம்
கல்கண்டு - 525 கிராம்
தேன் - 70 கிராம்
குங்குமப்பூ - 35 கிராம்


செய்முறை:

பூமாலை கட்ட உதவும் வெளிர் ரோஸ் நிற
ரோஜா மலர்களை அன்ரு பறித்த புத்தம்
புது பூக்களாக வாங்கவும்.

காம்பு நீக்கி சுத்தம் செய்து இதழ்களை சேர்த்து
மர உலக்கையால் அல்லது மத்து கொண்டு
இடித்து, சேகரிக்கவும்.

இந்தக் கலைவையுடன் தேன் மற்றும் குங்குமப்பூ
சேர்த்து, நன்றாகக் கலந்து, பாட்டிலில் எடுத்து
வைக்கவும்.

இந்த் லேகியம் தாது விருத்திக்குப் பயன்படும்.
உடல் வலிமை பெறும்.
பெண்களின் மாத விலக்குப் பிரச்னை முடிவு தரும்.
உடல் இளமையோடும், ஆரோக்கியக்தோடும்
பளபளப்பாக இருக்கும்.

தூக்கம்



சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது பழமொழி. அதாவது நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் நம் எந்த பணியையும் செய்ய முடியும்.

தூக்கம் என்பது உடலுக்கு மிக இன்றியமையாதது. உடலுக்கும் மனதிற்கும் முழுமையான ஓய்வை அளிக்கும் உன்னதமான ஒரு விஷயம்தான் தூக்கம்.
தினமும் 3 வேளை உண்ணும் உணவும் குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமும் ம‌னிதனு‌க்கு‌த் தேவைப்படுகிறது.

இரவில் அதிகமாக தூங்குபவர்களை விட குறைந்த நேரமே தூங்குபவர்களுக்குத்தான் உடல் பருமன் பிரச்சினை ஏற்படுவதாக சமீபத்தில் கனடா நாட்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் நடத்திய ஆய்வு கூறுகிறது.

குறைவாக சாப்பிடுவதும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் நேரம் தவறி சாப்பிடுவதும் உடலுக்கு கேட்டை உண்டாக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவுகளை உண்ணும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும். ஏனோ தனோ என்று உண்ணாமல் உடலுக்கு ஏற்ற உணவுகளை மட்டும் அளவோடு உண்பதும் நல்லது.

சரி ஏன் நேரத்திற்கு தூங்க வேண்டும் அது என்ன 6 மணி நேரம் தூக்கம் ஏன் அதிகாலையில் எழுந்திரிக்க வேண்டும் நேர‌ம் தவறாம‌ல் ஏ‌ன் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் என்று விதண்டாவாதமாக கேள்வி எழுப்புபவர்களுக்கு கீழ்க்கண்ட விளக்கத்தை தந்துதான் ஆக வேண்டும்.

நமது உட‌லி‌ல் உ‌ள்ள ஒ‌வ்வொரு உறு‌ப்புகளு‌ம் ஒரு ‌சில ம‌ணி நேர‌‌த்‌தி‌ல்தா‌ன் த‌ங்களதுத‌ங்களது ‌ப‌ணிகளை‌ச் செ‌ய்‌கி‌ன்றன. அ‌ந்த நேர‌த்‌தி‌ல் அத‌ற்கே‌ற்ற வகை‌யி‌ல் நமது உட‌ல் ஓ‌ய்வாக இரு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

இரவு 9 மணி முதல் 11 மணி வரை இந்த நேரம் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகள் வேலை செய்யும் நேரம். அதாவது நமது உடலில் உள்ள தேவையற்ற அதிகப்படியான ரசாயனங்களை வெளியேற்றும் பணியைச் செய்யும். எனவே இந்த சமயத்தில் நாம் படுக்கைக்கு படுக்கச் சென்று விட வேண்டும். இல்லையெனில் அமைதியாக அமர்ந்து பாடல் கேட்பதும் நல்லது.

இந்த நேரத்தில் ஓய்வெடுக்காமல் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து விடுகிறது.

இரவு 11 மணி முதல் 1 மணி வரை : ஈரல் தனது வேலையைச் செய்யத் துவக்கும். மேலும் இந்த நேரம்தான் ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் நேரமாகும்.
இந்த நேரத்தில் விழித்திருக்க நேரிட்டால் ஈரல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நள்ளிரவு 1 மணி முதல் 3 ம‌ணி வரை இந்த நேரத்தில் கல்லீரல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்கிறது. இந்த நேரமும் மிகவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போம்.

அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை இந்த நேரத்தில் நுரையீரல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்யும். எனவேதான் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் இந்த நேரத்தில் அதிகமாக கஷ்டப்படுவார்கள். இருந்தாலும் அதிகாலையில் ஆ‌ழ்‌ந்து உற‌ங்‌கினாலே இருமல் இயற்கையாகவே சரியாகிவிடும் என்கிறது மருத்துவம்.

காலை 5 மணி முதல் 7 மணி வரை இந்த நேரத்தில் பெருங்குடல் தனது சுத்திகரிப்புப் பணியைச் செய்கிறது. எனவே இந்த நேரத்தில் நமது வயிறு காலியாக இருப்பதோ அல்லது தண்ணீர் மட்டும் பருகி இருப்பதோ நல்லது.

காலை 7 மணி முதல் 9 மணி வரை : தற்போது சிறுகுடல் தனக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும். எனவே இந்த நேரத்திற்குள்ளாக காலை உணவை முடித்திருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் தொடர்ந்து காலை 6.30 மணிக்குள் காலை உணவை எடுத்துக் கொண்டால் குடல் நோய் தாக்கும்.

அதே சமயம் 7.30 மணிக்குள் காலை உணவை சாப்பிட்டால் நாம் திடகாத்திரமாக வாழலாம்.
மேலும் காலை உணவை தவிர்க்கும் பலர் உள்ளனர். அவர்கள் அந்த பழக்கத்தை கைவிட்டு குறைந்தபட்சம் 9 முதல் 10 மணிக்குள் தங்களது காலை உணவை முடிக்க வேண்டும்.

தாமதமாக உறங்கி காலையில் வெகு தாமதமாக எழுந்திரிப்பதால் நமது உடலில் இருந்து தேவையற்ற ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் பணி வெகுவாக பாதிக்கிறது.
மேலும் இரவு முதல் காலை 4 மணி வரைதான் எலும்பு மஞ்சையில் ரத்தம் உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது. எனவே நேரத்திற்கு தூங்கச் செல்ல வேண்டியது நமது உடலின் ரத்த உற்பத்திக்கும் அவசியமாகிறது.

ஆரோ‌க்‌கிய‌த்துட‌ன் வா‌ழ்வத‌ற்கான பழ‌க்க வழ‌க்க‌ங்களை இ‌ன்‌றி‌ல் இரு‌ந்தே கடை‌பிடி‌க்க முயலுவோ‌ம்.

உடல் நல குறள்





முதலில் மருந்து என்னும் அதிகாரம்

1)மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

2)அற்றல் அளவறிந்து உண்க அது உடம்பு

பெற்றான் நெடிதுய்க்குமாறு

3) அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல

துய்க்க துவர பசித்து



ஒருவன் தன் உடலுக்கு ஒத்துக்கொள்ளும் நல்ல உணவை அறிந்து அந்த உணவு நன்கு செரிக்கும் அளவையும் அறிந்து அந்த உணவு நன்கு செரித்த பின், நன்கு பசித்த பிறகு , தன் உடலுக்கு தேவையான அளவு மட்டும் உண்ணும் அறிவை பெற்றவனாக இருந்தால் அவனுக்கு வேறு மருந்து ஏதும் உண்ணும் நிலை வராது என்கிறார்... அவன் நீண்ட ஆயுளோடு வாழ்வான் என்கிறார்

இந்த காலத்தில் இக்குறளை பின்பற்ற தவறி நமக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகள், துரித உணவுகள், பெப்ஸி, கோக், போன்ற அதிக கலோரி கொண்ட உணவு வகைகளை நாமும் நம் குழந்தைகளும் செரிமானக்கோளாறு, உடல் பருமன் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு அதன் பயனாக உயர் இரத்த அழுத்தம் ,சர்க்கரை நோய் போன்றவற்றிற்கெல்லாம் ஆளாகிறோம்.


4)மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு

5) இழிவறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும்

கழிபே ரிரையான் கண் நோய்

6) தீயளவு இன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோய் அளவுஇன்றிப்படும்

மாறு கொள்ளாத நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் உணவை நன்றாகப்பசித்த பின் மனம் விரும்பும் அளவு இல்லாமல்; உடலுக்குத்தேவையான அளவு மட்டும் உண்டால் உயிர் வாழ்க்கைக்கு நோயால் இடயூறு வராது.

உடலுக்கு தேவையான உணவை ஆராய்ந்து குறைந்த அளவு இன்னது என்று அறிந்து உண்பவனிடம் இன்பம் (உடல் நலம் ) நிற்கும்.

மனதின் விருப்பத்திற்கு இயைந்து அளவு மீறி இஷ்டம் போல் உண்பவனிடம் நோயும் இஷ்டப்படு நிற்கும்

பசித்தீயின் அளவிற்கு ஏற்றாற் போல் உண்ணாமல் ஒன்றையும் ஆராயாமல் அளவு மீறி உண்டால் நோயும் அளவு மீறி வரும்

இக்கால மக்கள் உணவுப்பழக்கங்களை மாற்றியதாலேயே பெருமளவு நோய்க்கு ஆளாகின்றனர் அதை வள்ளுவவர் முன்பே எடுத்துச்சொல்லியிருக்கிற்ற�
யாரு கேட்டா???

மேற்சொன்னது போல் உணவுப்பழக்கங்கள் நோய் வராமல் தற்காத்துக்கொள்ள சொன்ன வழிகள் ...

மீறி நோய் வந்து விட்டால் அதை எப்படி நீக்குவது என்று வள்ளுவர் சொன்னதை கிரேக்க மருத்துவர் தற்கால நவீன மருத்துவத்தின் தந்தை ஹிப்போக்கிராடஸும் அப்படியே பிரதிபலிக்கிறார்

9)நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய் நாடி வாய்ப்பச்செயல்

ஒருவன் நோய்வாய்ப்பட்டு விட்டால் அது என்ன நோய் என்பதை முதலில் அறிய வேண்டும் ( சும்மா தலைவலில் என்றோ காய்ச்சல் என்றோ அதற்கு மட்டும் ஸிம்ப்டமேடிக் ட்ரீட்மென்ட் எல்லாம் எடுக்கக்கூடாது) பிறகு அந்த நோய் எப்படி வந்தது என்று காரணத்தை அறிய வேண்டும் பிறகு தான் அந்த நோயினை எப்படிக்குணப்படுத்தால் என்னும் சிகிச்சையினை தொடங்க வேண்டும்.

10)உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்

அவ்வாறு மருத்துவர் சிகிச்சையை தொடங்கும் முன் நோயாளியின் உடல் நிலை ,வலிமை வயது ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு நோயின் தன்மை அதன் தாக்கம் ... இவற்றையும் கணக்கிட்டு அதற்கேற்றாற் போல் மருந்தின் தன்மை, அளவு ஆகியவற்றை முடிவு செய்து பின்பே சிகிச்சையை தொடங்க வேண்டும்

நாடிசுத்தி

திருமந்திரம் என்னும் நூல் தமிழ் ஆகமம். ஆகமம் என்றால் வேதம் என்று பொருள். இந்த நூலை திருமூலர் என்னும் தவயோகி இயற்றியுள்ளார். மக்கள் வாழும் முறை மற்றும் கடவுளை காணும் முறையை அறிவியல் பூர்வமாக இயற்றியுள்ளார். திருமூலர் அஷ்டமா சித்திகள் பெற்ற தவயோகி ஆவார். அவர் இந்த நூலில் மக்கள் நூறு வயது முதல் மூவாயிரம் வருடம் வரை உயிருடன் வாழும் வழிகளை கூறியுள்ளார்.
மந்திரம் :
மூலன் உறை செய்த மூவாயிரம் தமிழ்.
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்துஅறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.
பொருள் :
திருமூலர் ஆகிய நான் உலக மக்களின் நன்மைக்காக மூவாயிரம் மந்திரங்களை (பாட்டு) கடவுள் அருளால் இயற்றியுள்ளேன். காலையில் எழுந்து கருத்தை அறிந்து படித்தால் கடவுளை அடையலாம்.
ஒவ்வொரு தமிழனின் வீடுகளிலும் திருமூலரின் புத்தகங்கள் இருப்பது அவசியம். திருமூலர் உடம்பை வளர்க்கும் மற்றும் அறிவை வளர்க்கும் முறைகளை பற்றி எழுதியுள்ளார். திருமூலரின் வரலாற்றை கூறிய பின் அவருடைய மந்திரங்களையும் அவற்றின் பொருளையும் கூறுவேன்.
திருமூலரின்வரலாறு :
திருமூலரின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. அவர் மூலர் என்னும் உடலில் தங்கியதால் அப்பெயர் அவருக்கு வந்தது. தவயோகி ஒருமுறை காட்டு வழியாக நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டமாக மேய்ச்சலுக்கு வந்த மாடுகள் மிரட்சியுடன் நிற்பதை கண்டார். உடனே அருகில் சென்று பார்த்தார். அங்கே மாடு மேய்ப்பவன் இறந்துக் கிடந்தான். மாடுகள் கவலைப் படுவதைக் கண்டு மனமிறங்கினார் தவயோகி. உடனே மறைவான இடத்துக்கு சென்று தன்னுடைய அஷ்டமா சித்திகளை பயன்படுத்திக் கூடுவிட்டு கூடுபாயும் முறையில் தன் உயிரை மாடு மேய்ப்பவன் உடலில் செலுத்தினார். மாடு மேய்ப்பவன் உயிருடன் வந்தவுடன் மாடுகள் உற்சாகமாயின. மாலை பொழுது சாய்ந்தவுடன் மாடுகள் வீடு திரும்பின. மாடு மேய்ப்பவனும் பின்னே சென்றான். வீடு வந்தவுடன் மாடு மேய்ப்பவன் திரும்பினான். உடனே அவனுடைய மனைவி கையை பிடித்து இழுத்தாள். வீட்டுக்குள் வராமல் எங்கே செல்கிறீர்கள் என்றுக் கேட்டாள். உடனே மாடு மேய்ப்பவன் நான் உன் கணவன் இல்லை என்றுக் கூறினான். மாடு மேய்ப்பவனின் மனைவி நியாயம் கேட்பதற்காக ஊர் மக்களை அழைத்து வந்தாள். அங்கு மாடு மேய்ப்பவன் மண்டபத்தில் தவம் செய்துக் கொண்டிருப்பதைக் கண்டு இவன் உன் கணவன் இல்லை என்றுக் கூறினர். உடனே தவயோகி தன் உடலை மறைவாக வைத்திருந்த இடத்துக்குச் சென்றார். அங்கு அவருடைய உடலை காணவில்லை எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. உடனே அவர் கடவுள் நமக்கு புதிய உடலைக் கொடுத்திருக்கிறார் என்று அந்த மாடு மேய்ப்பவனின் உடலில் தங்கிவிட்டார். திருமூலர் காட்டிற்குள் அமர்ந்து இன்னும் இறக்காமல் தவம் செய்துக் கொண்டிருக்கிறார்.
முன்னுரை :
நான் திருமந்திரத்தில் இருந்து மனிதனின் உடலை எப்படி வளர்ப்பது என்பதனை பற்றி முக்கியமாகக் கூறுகிறேன்.
மந்திரம் :
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
பொருள் :
உடம்பு அழிந்தால் உயிர் அழிந்து விடும். உடம்பில் நோய் இருந்தால் தெளிவாக சிந்திக்க முடியாது. ஏதாவது வேலையை ஏற்றுக் கொண்டால் சரிவர செய்ய இயலாது. ஆகவே உடம்பை வளர்க்கும் முறையை அறிந்துக் கொண்ட நான் உடம்பை சரியாகப் பேணி பாதுகாத்து உயிரையும் வளர்க்கிறேன்.
மந்திரம் :
உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யான்இருந்து ஓம்புக்கின் றேனே.
பொருள் :
இதற்கு முன்பு உடல் தேவையற்றது என்று நினைத்திருந்தேன்.உடம்பிலே உயிராகிய கடவுள் இருப்பதைக் கண்டேன். ஆகவே உடலை இப்போது பேணிப் பாதுக்காத்து வருகின்றேன்.
உடலினை வளர்த்த திருமூலர் பிராணாயாமம் மற்றும் ஆசனத்தைப் பற்றிக் கூறியுள்ளார். நான் பிராணாயாமம் பற்றி மட்டும் கூறுகிறேன்.
பிராணாயாமம் :
பிராணாயாமம் என்பது மூச்சு பயிற்சி.

பிராணாயாமத்தின் பயன்கள் :
1. தினமும் செய்தால் வியாதிகள் வராது.
2. ஆரோக்கியமாக இருக்கலாம்.
3. கொழுப்பைக் குறைக்கும்.
4. ஆயுளை அதிகரிக்கும்.
5. நினைவாற்றலை அதிகரிக்கும்.
6. தலைவலி வராது.
7. நுரையீரல், குடல், சிறுநீரகம், வயிறு, மூளை ஆகியவைச் சிறப்பாக இயங்கும்.
8. இரத்தநாளங்கள் சுத்தமாகும்.
9. மனதை ஒரு நிலைப் படுத்தும் திறமை அதிகரிக்கும்.
10. ஆஷ்துமா போன்ற நோய்கள் குறையும்.
11. குரல் இனிமையாகும்.
12. மலம், ஜலம் குறையும்.
13. இரத்த அழுத்தம் குறையும்.
14. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராது.
15. பசி குறையும். தாகம் குறையும்.
16. சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
17. தேவையற்ற தூக்கம் குறையும்.
18. எவ்வளவு கடினமான வேலையை செய்தாலும் எளிதில் சோர்வடையாமல் செய்யலாம்.
19. வெய்யிலையும், குளிரையும் தாங்கும் சக்தி ஏற்படும்.
20. மூச்சுக்காற்றை சீராக்கும்.
21. நுரையீரலில் காற்றினால் ஏற்படும் மாசுக்களைக் கட்டுபடுத்தும்.
22. உடல் உறுப்புக்களுக்கு போகின்ற பிராணவாயு இதனால் அதிகரிக்கும்.
23. ஆகவே பிராணாயாமம் பயிற்சி செய்பவர்கள் 7 மணிநேரம் தூங்கினால் போதும். 8 மணி நேரம் தூங்க வேண்டியதில்லை. சிறிது நேரம் தூங்கினாலும் அதிக நேரம் விழித்திருந்த சுறுசுறுப்பு ஏற்படும்.

மந்திரம் :
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை
அங்கே பிடித்து அதுவிட்டளவும் செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே.
பொருள் :
எங்கு இருந்தாலும் மூச்சைப் பிடித்து பிராணாயாமம் செய்தால் உடம்பிற்கு(ஆக்கை) அழிவில்லை. மூச்சை முடிந்த அளவு இழுத்துப் பிடித்து வெளியே விட்டால் தலைவனாகலாம். வாழ்க்கையில் முன்னேறலாம். மற்றவர்கள் போற்றுவார்கள்.
மந்திரம் :
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.
பொருள் :
பறவையை விட வேகமாக செல்ல கூடிய குதிரை போன்ற மூச்சை அடக்கினால் போதை பொருட்களை குடிக்கத் தேவையில்லை. நாம் சுறுசுறுப்பாக துள்ளி நடக்கலாம். சோம்பல் ஏற்படாது. உண்மையை சொல்கிறேன் சூடு, சொரணை இருந்தால் கேட்டுக் கொள்.
மந்திரம் :
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமம் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடையோனே.
பொருள் :
இஷ்டபடி வெளியில் வருகின்ற மூச்சுக் காற்றை முறைப்படி பிராணாயாமம் பயிற்சி மூலம் மூச்சை முறைப்படித்தினால் உறுப்புகள் புத்துணர்வு பெற்றுச் சிவக்கும். தலைமுடிக் கறுப்பாகும். பிராணாயாமம் பயிற்சி செய்யும் வரை உடம்பிலிருந்து உயிர் பிரிந்து செல்லாது.
மந்திரம் :
தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை
தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலம் தன்வழி நூறே.
பொருள் :
இடப்பக்கமும், வலப்பக்கமும் மூச்சு பயிற்சி மாற்றி மாற்றி பயிற்சி செய்து தலைவராகலாம் என்று அறிந்தவர்கள் யாரும் இல்லை. மூச்சுப் பெயர்ச்சி செய்து ஒளி வடிவில் கடவுளைக் காணலாம். மூச்சுப்பெயர்ச்சி செய்து ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தலாம். ஆகவே இதன் மூலம் நூறு வயது வரை நோய் நொடியின்றி இளமையுடன் வாழலாம் என்று திருமூலர்க் கூறியுள்ளார்.
பிராணாயாமம் செய்யும் முறை :
பிராணாயாமம் செய்ய தகுதியான இடங்கள் :
1. காற்றோட்டமான இடமாக இருக்க வேண்டும்.
2. தனிமையான இடமாக இருக்க வேண்டும்.
3. ஏ.சி அறையில் பண்ணக்கூடாது.
4. காற்றுப் பலமாக அடிக்கும் இடங்களில் செய்யக் கூடாது.
5. கொசுவர்த்தி சுருள், திரவம், கட்டி பயன்படுத்தக்கூடாது. கொசுக்களை கொல்வதை போல் மனிதனையும் கொன்று விடும். ஆகவே கொசுவலை பயன்படுத்தி பாதுகாக்கவும்.
தகுதியான நேரம் :
1. காலையில் 5 மணிக்கு செய்யவேண்டும். முடியாவிட்டால் மாலையில் அல்லது காலையில் செய்யலாம்.
2. சாப்பிட்டு 3 மணிநேரம் கழித்து செய்யவேண்டும்.
3. பிராணாயாமம் செய்து முடிந்து அரைமணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது.
4. பிராணாயாமம் செய்து 10 நிமிடம் கழித்து சாப்பிட வேண்டும்.
5. சோர்வடையும் அளவுக்கு பிராணாயாமம் செய்யக் கூடாது.
தகுதியான ஆசனம் :
பத்மாசனம், சித்தாசனத்தில் செய்வது நல்லது. அப்படி இல்லையெனில் சுகாசனத்தில் செய்துக் கொள்ளலாம்.
மூச்சு விடுதலில் நான்கு நிலைகள் உள்ளது.
பூரகம் :
மூச்சுக் காற்றை உள்ளே இழுத்தல்.

ரச்சகம் :
மூச்சை வெளியே விடுதல்.
உள்கும்பகம் :
மூச்சை உள்ளே நிறுத்தி வைத்தல்.
வெளிகும்பகம் :
மூச்சு காற்று உள்ளே இல்லாமல் வெளியே நிறுத்தி வைத்தல்.
மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கும் போதும், வெளியே விடும் போதும் ஒரே சீராக செய்ய வேண்டும்.
பந்தம் :
மூலபந்தம் :
மனிதனின் மூலாதாரம் மலதுவாரத்திற்கும், பிறப்பு உறுப்பிற்கும் நடுவில் உள்ளது. சித்தாசனத்தில் அமர்ந்து மூலாதாரத்தை குதிகாலால் அழுத்திக் கொள்ளவும். மலதுவாரத்தை குறுக்கி மலமிறக்கும் உணர்ச்சியை வயிற்றை நோக்கி இழுக்கவும்.
மூலபந்தத்தின் பயன்கள் :
1. இதை பண்ணுவதினால் தேவையில்லாத பசி குறையும்.
2. மலசிக்கல்களும், பிறப்பு உறுப்புகளுக்கும் சீராக வேலை செய்யும்.
3. இளமைக் குறையாது.
இது பிராணாயாமம் செய்யும் பொழுது செய்ய வேண்டும்.
ஜலந்தர்பந்தம் :
தொண்டையைக் குறுக்கி தலையை முன்னே சாய்த்து மார்பில் நாடியை அழுத்தமாக அழுத்தும் விதம் அமரவும். இது உள்கும்பகம் ஆரம்பிக்கும் போது செய்து ரச்சகம் செய்வதற்கு முன் நிறுத்தவும்.
ஒட்டியானபந்தம் :
வயிற்றைக் குறுக்கி வயிற்றைப் பின்நோக்கி இழுக்கவும். இது ரச்சகம் செய்ய ஆரம்பிக்கும் போது செய்து பூரகம் செய்வதற்கு முன் நிறுத்தவும்.

பிராணாயாமம் முறைகள் :
நாடிசுத்தி :
புதிதாக பிராணாயாமம் பயில்பவர்கள் ஒரு மாதத்திற்கு இதைச் செய்யலாம். வலது மூக்கை விரலால் மூடிவிட்டு இடதுபக்கம் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும். அப்புறம் இடதுமூக்கை விரலால் மூடிவிட்டு வலதுபக்கம் வழியாக மூச்சை வெளியே விடவும். அப்புறம் வலதுபக்கம் வழியாக உள்ளே இழுக்கவும். இடதுபக்கம் வழியாக வெளிவிட வேண்டும். இதைபோல் மாற்றி மாற்றி 5 நிமிடம் செய்யவும். நாடிசுத்தி கட்டாயமாக செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. இதை செய்ய தேவையில்லையென்றால் இதற்கு அடுத்தப் பயிற்சி செய்யவேண்டும்.
அனுலோம் ,விலோம் :
இடதுமூக்கை மூடிவிட்டு வலதுமூக்கால் மூச்சை மெதுவாக ஒரே சீராக மூச்சை உள்ளே இழுக்கவும். பிறகு இரண்டுபக்க மூக்கையும் மூடிக்கொள்ளவும். முடிந்த அளவு மூச்சை உள்ளே வைத்துக்கொண்டு வலதுபக்கம் வழியாக வெளிவிடவும். அடுத்து வலது மூக்கை மூடி இடது மூக்கால் மூச்சை இழுக்கவும். பின்னர் கும்பகம் செய்து வலது மூக்கால் வெளிவிடவும். இவ்வாறு மூக்கை மாற்றி மாற்றி பயிற்சி செய்யவும். முதலில் சிறிதுக் காலத்திற்கு 5 முறை செய்ய வேண்டும். பிறகு இருபது முதல் முப்பது முறை செய்யலாம். முதலில் 1 விநாடி பூரகம் செய்து 2 விநாடி கும்பகம் செய்து பின்னர் 2 விநாடி ரச்சகம் செய்யவும். பிறகு சிறிது சிறிதாகக் கூட்டிக் கொண்டு சென்று 5:20:10 என்ற கணக்கிற்கு பண்ணலாம்.இதில் இன்னொரு முறையும் உண்டு. வெளிகும்பக முறையில் 5:10:20 என்ற கணக்கிற்கு பண்ணலாம். வெளிக்கும்பக முறை அதிகபலனை தரும். இப்படி செய்வதினால்
1. நுரையீரலில் உள்ள நோய்கள் குறையும்.
2. இரத்தம் சுத்திகரிக்கப்படும்.
எடுத்துக்காட்டுகள்
உள்கும்பக முறை :

1:2:2 ஆரம்ப நிலை 1 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
2 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக் கொள்ளவும்.
2 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
5:10:10
இரண்டுமாதம் கழித்து 5 விநாடிகள் மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
5:20:10 5 விநாடிகள் மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
20 விநாடிகள் மூச்சை உள்ளே வைத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.




வெளிகும்பக முறை :

1:2:2 1 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
2 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
2 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும்.
5:10:10 5 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
10 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும்.
5:10:20 5 விநாடி மூச்சை உள்ளே இழுத்துக் கொள்ளவும்.
10 விநாடிகள் விநாடிகள் மூச்சை வெளியில் விடவும்.
20 விநாடிகள் மூச்சை வெளியில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும்.
கபால ஜொலிப்பு :
இந்த பிராணாயாமம் செய்வதால் கபாலம் துடிக்கும். பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். வாயை மூடிக்கொள்ளவும். கண்களை மூடிக்கொள்ளவும். பூரகம் ரச்சகத்தில் செய்யவும். இப்பயிற்சியில் கும்பகம் கிடையாது. ஆரம்பத்தில் ஒரு விநாடிக்கு ஒரு முறை பூரகம் ரச்சகம் செய்யவும். படிபடியாக உயர்த்திக்கொண்டு சென்று ஒரு விநாடிக்கு பத்து முறை வரை பூரகம் ரச்சகம் செய்யவும். வியர்த்துக் கொட்டும் வரை இப்பயிற்சி செய்யவும்.
பயன்கள் :
1. சுவாச குழாய் சுத்தமாகும்.
2. ஆஷ்துமா குணமாகும்.
3. காச நோய் வராது.
4. ரத்தம் சுத்தமடையும்.
உஜவி :
பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்து கொள்ளவும். வாயை மூடிக்கொள்ளவும். இரண்டு மூக்கு வழியாகவும் மூச்சை இழுத்துக் கொள்ளவும். முடிந்த அளவு உள்ளே கும்பகம் செய்து வலது மூக்கை மூடிக்கொண்டு இடது மூக்கு வழியாக காற்றை வெளியே விடவும். மூச்சை உள்ளே இழுக்கும் போது மார்பை விரிக்கவும். மூச்சை உள்ளே இழுக்கும் போது ஒரே சீராக இழுக்கவும்.
சீக்காரி :
பத்மாசனம் அல்லது சித்தாசனத்தில் அமர்ந்துக் கொள்ளவும். நாக்கை மேலே மடித்துக் கொள்ளவும். வாயை திறந்து ஷ்ஷ் சத்தம் போட்டுக்கொண்டு மூச்சை வாய் வழியாக இழுக்கவும். முடிந்த வரை அதிகநேரம் கும்பகம் செய்து இரண்டு மூக்கு வழியாக ரச்சகம் செய்யவும்.

பயன்கள் :
1. தாகம் குறையும்.
2. சோம்பல் குறையும்.
3. தூக்கம் போய்விடும்.
சீத்தாளி :
பத்மாசனம் அல்லது சித்தாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்துக் கொள்ளவும். அதன் பிறகு நாக்கை வாய் வெளியே நீட்டிக் கொள்ளவும். அதன்பிறகு காற்றை நாக்கு வழியாக உள்ளே இழுத்து முடிந்த வரை கும்பகம் செய்து பின்பு ரச்சகம் செய்யவும்.
பயன்கள் :
1. கட்டி, மஞ்சள் காமாலை, தோல்வியாதிகள் நீங்கும்.
2. தாகம் குறையும்.
3. கோபம் குறையும்.
பஷ்திரிகா :
பஷ்திரிகா என்பது கபாலமும், உஜவியும் சேர்ந்து செய்வதாகும். கும்பக முறையில் செய்யாமல் 5 லிருந்து 10 முறை வேகமாக மூச்சை வேகமாக இழுத்து வெளிவிடவும். பின்னர் உஜவி முறையில் காற்றை இழுத்து முடிந்த அளவு கும்பகம் செய்து பின்னர் ரச்சகம் செய்யவும். கோடை காலங்களில் ஒரு முறை செய்யவும். குளிர் காலங்களில் இரண்டு முறை செய்யவும். முதலில் 5 விநாடிக்கு கும்பகம் செய்து பின்னர் படிப்படியாக நான்கு நிமிடம் வரை கும்பக நேரத்தை கூட்டவும்.
பயன்கள் :
குளிர்க்காலங்களில் போர்வை இல்லாமல் இப்பயிற்சி மூலம் உடம்பை சூடாக்கிக் கொள்ளலாம்.
வண்டு பிராணாயாமம் :
வஜ்ராசனத்தில் அமர்ந்துக் கொள்ளவும். மூச்சை வேகமாக இழுக்கவும். பின்னர் தொண்டையிலிருந்து குறட்டை விடும் போது வெளிவரும் சத்தம் போல், வண்டு சத்தம் போடுவது போல் மூச்சை மெதுவாக வெளியே விடவும்.

அதிசய மூலிகை கிணறு

நீங்கள் பார்க்கும் இந்த மூலிகை கிணறு பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த கிணறு மொத்தம் முப்பது மீட்டர், மூவாயிரம் படிகள் மற்றும் பதிமூன்று மாடிகள் கொண்டது. பார்க்க அழகாக இருக்கும் இந்த கிணற்றை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.










இந்த மூலிகை கிணறு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. ஊரின் பெயரை தமிழ்படுத்தினால் புரியாது என்பதால் ஆங்கிலத்தில் கொடுக்கிறேன் இதுதான் ஊரின் பெயர்

"Abhaneri near Jaipur"
மூலிகை கிணற்றின் பெயர்
Chand Baori

Thursday, October 2, 2008

வர்மம் - தமிழனின் தற்காப்புக் கலை

உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம் குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும் கொற்றம் அமைத்துக் கோலோச்சியதாக வரலாறு இல்லை. பகைவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வோடு, உலகின் ஒவ்வோர் இனமும் வீர விளையாட்டுக்களுக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டன. ஐம்புலன்களையும் அடக்கி, உடலையும் மனதையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த மனித இனங்கள், உயிர்காக்கும் தற்காப்புக் கலைகளையும் உருவாக்கி, அவற்றைப் பேணிடும் வகையில் பாசறைகள் அமைத்துப் பயிற்சிகள் மேற்கொண்டன. இதில் தமிழினமும் அடங்கும்.

“வாளொடு முன்தோன்றி மூத்தக் குடி” என்னும் செவ்விய கூற்று, தமிழ் இனத்தை ஒரு வீரப் பரம்பரையாகவும், தமிழ் மண்ணை ஒரு வீரத்தின் விளைநிலமாகவும் சித்தரிப்பதாகும். தற்காப்புக் கலையில் தமிழ் இனம் தழைத்தோங்கியிருக்கிறது என்பதற்குச் சங்க நூல்கள் தொட்டே தடயங்கள் கிடைக்கின்றன. “முதுமரத்த முரண்களரி வரிமணல்” என்ற பட்டினப்பாலைக் குறிப்பு ஒன்று, தமிழனின் போர்த்தொழில் வித்தைகள் பற்றிய குறிப்புக்கள் தருகின்றது. தொல்காப்பியம், பதிற்றுப் பத்து, புறப்பொருள் வெண்பாமாலை, திருமந்திரம் ஆகிய நூல்களிலும் தமிழனின் தற்காப்புக்கலை அங்கங்கள் விரித்துரைக்கப் பட்டிருக்கின்றன.

ஆனால், இந்தப் போர்த்தொழில் வித்தைகட்கெல்லாம் அப்பாற்பட்டு, தமிழினம் அறிந்துவைத்திருந்த “வர்மம்” என்னும் தர்மம், உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் செம்மாந்து நிற்கிறது. சித்தர் பெருமக்களின் செய்தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது தாங்கொணாத வேதனையாக இருக்கிறது. அந்த வேதனைக்குக் கடுகளவேனும் விடிவுகாணும் முடிவுதான் இந்தக் கட்டுரையின் கருப்பொருள்.

வர்மத்தின் எண்ணிக்கைகள், வர்ம நாடிகளின் உட்பிரிவுகள், மாத்திரைகள், காலங்கள், ஈடுகள், அடங்கல்கள், இளக்குமுறைகள் இன்னோரன்ன விளக்கங்களையெல்லாம் யான் இங்கு விலாவாரியாக எழுதிடக் கருதவில்லை. மாறாக, வர்மக் கலையின்பால் தமிழனுக்கு உண்டாக வேண்டிய பெருமிதங்களையும் பெருங்கடமைகளையும் மட்டும் ஒரு படைப்பாளனின் பார்வையில் நின்றுகொண்டு அலசிட முற்படுகிறேன்.

“வர்மம்” வடமொழியா?

தமிழின் வரலாறும் சொல்வளமும் அறியாத சிலர் “வர்மம்” ஒரு வடமொழிச் சொல் என்றும் வர்மக் கலையானது சமஸ்கிருத நூல்களிலிருந்துதான் தமிழுக்குப் பெயர்க்கப்பட்டதென்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மெய்ப்பொருள் காண்பதறிவு என்ற கொள்கையுணர்வு இங்கே நமக்கு மிகமிகத் தேவைப்படுகிறது. அத்தோடு, இலக்கண விதிகளையும் விளக்கங்களையும் ஊடகமாக வைத்து இதை நாம் அணுகவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.

தமிழில் “வல்” என்னும் சொல் ஒன்று உண்டு. அச்சொல் நிலைமொழியாக நிற்பின், ஏவல் வினைமுற்று ஆகும். அந்த நிலைமொழியோடு வருமொழியாக ஒரு பெயர்ச் சொல்லை இணைத்தால், அதை உரிச்சொல் ஆக்கிவிடலாம் (எடுத்துக்காட்டு: வல்+இனம் ஸ்ரீ வல்லினம்). நிலைமொழி ஒரு பகுதியாக நிற்க, அதனை இன்னொரு விகுதியோடு புணர்ந்திட அனுமதித்தால், அது பெயர்ச்சொல் ஆகிவிடும், அதாவது, பகுதி மற்றும் விகுதியின் இணைப்பால் ஒரு புதிய சொல் பிறக்கும் என்பது புணரியல் விதி. இந்த விதியின் அடிப்படையில், “வல்” என்ற பகுதியோடு “மை” என்ற (தொழிற்பெயர்) விகுதியை இணைத்தால் “வன்மை” என்ற பெயர்ச்சொல் பிறக்கிறது. “வன்மை” என்ற சொல்லுக்கு “வல்லமை” “வல்லவனாக இருத்தல்” “வலிமை பொருந்திய செயல்புரிதல்” என்றெல்லாம் பொருள்விளக்கம் கொடுக்கலாம். இந்த “வன்மை” என்ற சொல்லின் வேறொரு வடிவம்தான் “வன்மம்”. “வன்மம்” என்ற இந்தச் சொல்லில்கூட “அம்” என்ற ஒரு தொழிற்பெயர் விகுதிதான் இணைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

“வன்மம்” என்னும் இந்தத் தூய தமிழ்ச் சொல்தான் காலப் போக்கில் “வர்மம்” என மருவியிருக்கிறது என்பது மொழியியல் ஆராய்ச்சிகளின் மூலம் மறுப்பிற்கிடமின்றித் தெளிவாகியுள்ளது. ‘ன’கர ‘ண’கர ஒற்றுக்கள் ‘ர’கர ஒற்றாகத் திரிவது என்பது, தமிழ்ச் சொற்களின் மரூஉக் களங்களிலே பரவலாகக் காணப்படும் மாற்றங்கள் ஆகும். ‘வண்ணம்’ என்பது ‘வர்ணம்’ என்று வழங்கப்படுவதும், ‘துன்மார்க்கம்’ என்பது ‘துர்மார்க்கம்’ என்று வழங்கப்படுவதும் இதற்கான சில எடுத்துக்காட்டுக்கள். இப்படித்தான் ‘வன்மம்’ என்பதும் ‘வர்மம்’ என்று மருவியிருக்க வேண்டுமென்பது இலக்கணம் படித்தவர்க்கு எள்ளளவும் ஐயமின்றி விளங்கும். பண்டைத் தமிழ் மன்னர்கள் சிலர், ‘வர்மன்’ என்னும் சொல்லைத் தமது ஈற்றுப் பெயராகக் கொண்டு திகழ்ந்திருப்பதைக் காணுங்கால், அது ‘வர்மம்’ என்ற தூய தமிழ்ச் சொல்லோடு ‘அன்’ என்னும் ஆண்பால் விகுதி நிகழ்த்தியிருக்கும் சுத்தமான இலக்கணப் புணர்ச்சிதான் என்பதும் எந்தவொரு தமிழ்மகனுக்கும் எளிதில் விளங்கும். வாதத்துக்கெல்லாம் அப்பாற்பட்ட “வர்ம” வரலாறு இதுதான். இதற்குப்போய்ச் சமஸ்கிருதச் சாயம் பூசுவதை எப்படிச் சகிப்பது?

சமஸ்கிருதத்திலும் வர்மநூல்கள் இல்லாமல் இல்லை. தமிழனின் கலைகளையெல்லாம் கபளீகரம் செய்து தத்தமது மொழிகளில் புத்தம்புது பெயர் சூட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்த வடவர் குலம், வர்மக் கலையையும் விட்டு வைக்கவில்லை. வர்ம ஸ்தானங்களை விளக்கி வாக்படேர் என்னும் சமஸ்கிருத ஆசிரியர் எழுதிய நூலின் பெயர் “அஷ்டாங்க ஹ்ருதயா” என்பதாகும். அந்த நூலின் தலைப்பிலும் சரி, உள்ளடக்கங்களிலும் சரி “வர்மம்” என்ற சொல் எந்த இடத்திலும் மூலச்சொல்லாக வழங்கப்படவில்லை யென்பது குறிப்பிடத்தக்கது. எனவே, “வர்மம்” வடமொழிச் சொல் அல்ல என்பது தெளிவாகிறது.

இது இவ்வாறிருக்க, தமிழனின் வர்மக்கலை நூல்களில் வடமொழிச் சொற்கள் இருக்கிள்றன என்பதையும் நாம் மறுக்க முடியாது. நட்சத்திர காலம், சந்திர கலை, சர்வாங்க அடங்கல், தட்சிணா வர்மம் போன்றவை எடுத்துக்காட்டுக்கள். இருப்பினும், இவை மிகக் குறைவாகவே உள்ளன. அதுவும் வடமொழித் தாக்கத்தினால் வந்து புகுந்துவிட்டவைதான். அவற்றுக்கு ஈடான தமிழ்ச் சொற்கள் நம்வசம் இருந்திருந்தும், அச்சொற்களை நம்மவர்கள் கையாள முடியாத அளவுக்கு வடமொழி ஆதிக்கம் கோலோச்சியிருக்கிறது என்பதைத்தான் இது நமக்கு உணர்த்துகிறது. தமிழின் சொல்வளம் உலகறிந்த உண்மை. இன்னும் சொல்லப்போனால் நமது வர்மநூல்களில் காணப்படுகின்ற தமிழ்ச் சொற்கள்தான் ஒருசில வடிவமாற்றங்களோடு வடமொழியில் வாசம் புரிகின்றன என்பதற்கு ஆதாரங்கள் காட்டலாம்.

பதஞ்சலி முனிவனின் யோகசாஸ்திரத்தில் காணப்படும் “சூஷ்மனா” (தமிழில் ‘சூட்சுமம்’ என்பார்கள்) என்பது, நமது வர்மநூலில் உள்ள “சுழிமுனை” என்பதன் வடிவமாற்றம் ஆகும். ‘சுழிமுனை’ என்னும் சொல், நம் உடலில் உள்ள மிக முக்கியமான இரண்டு உயிர்நிலை முடிச்சுகளைக் குறிப்பதாகும். “சுழிமுனைகள் இரண்டுண்டு” என்று நமது தமிழ் வர்மநூல்கள் குறிப்பிடுகின்றன. அதாவது, ணநசழ pழiவெ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஈடாக வழங்கப்படத் தகுந்த அப்பட்டமான ஆதித் தமிழ்ச் சொல்தான் ‘சுழிமுனை’. அதைத்தான் வடவர்கள் எடுத்து வைத்துக்கொண்டு “சூஷ்மனா” என்கிறார்கள். “சுழி” என்ற சொல்கூட “சுழியம்” என்ற தொழிற்பெயர் வடிவம் கொண்டு, இப்போது பரவலாக இதர இந்திய மொழிகளில் “சூன்யம்” என்று வழங்கப்பட்டு வருவதை யார்தான் மறுக்க முடியும்? இதே “சுழி” எனும் சொல்தான் “ணநசழ” என்று வழங்கப்படும் ஆங்கிலச் சொல்லுக்கும் நதிமூலம் என்பது சொற்பிறப்பியல் வரலாற்றில் கிடைக்கும் இன்னொரு சுவையான தகவல். ஆக, எத்தனையோ தமிழ்ச் சொற்கள் பிறமொழிகளுக்கு இடம்பெயர்ந்து அங்கே சில வடிவ மாற்றங்களுடன் குடிகொண்டிருக்கின்றன என்னும் பேருண்மை நாளுக்கு நாள் ஆதாரங்களுடன் வலுவடைந்து வருகிறது.

வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும் திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், எண்ணிறந்த தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது. “வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது என்பது வரலாற்று அறிஞர்கள் தெளிந்துரைக்கும் முடிவு. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன. தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று, வௌ;வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

தற்காப்புக் கலையைப் பொறுத்தமட்டில், சீனம் நெடுங்காலமாகவே சிறந்து விளங்கியிருக்கிறது. அங்கும் அடிமுறை ஆசான்மார் பெரும் அரசியல் ஞானிகளாகக் கோலோச்சியிருப்பது வரலாற்றில் பதிவாயிருக்கிறது. தற்காப்புக் கலையில் சீனம் எந்த அளவுக்குப் பிரபலம் வாய்ந்தது என்றால், இன்றும் கூட தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வசிக்கும் அடிமுறை ஆசான்மார் தற்காப்புக் கலையைச் “சீனாடி” என்று குறிப்பிடுவதுண்டு.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்மத்தின் அதிசயங்கள் !!

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விழைகிறேன்:

 ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.
 வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.
 ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.
 ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.
 நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.
 மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்.

வர்மக்கலை ஆசிரியர் யார்?

“வர்ம”மெனும் பொக்கிஷத்தின் வானளாவிய புகழ்பற்றிச் செருக்கும் செம்மாப்பும் பூண்டிருக்கும் தமிழினம், அதன் ஆசிரியன் யார் என்பதற்குச் சரியான விடைதர இயலாமல் தலைநாணி நிற்கிறது. ஒப்பற்ற இக்கலைக்கென்று உலகளாவிய பொது நூல் ஒன்று நம் கையில் இல்லை என்பது உண்மையிலேயே வருத்தம் தருகிறது. வர்மத்தைப் பற்றி வலுவானதொரு இலக்கண நூல் வகுத்து, உலக அரங்கிலே உலா வரவேண்டிய உன்னத நிலையைக் தமிழ் அன்னைக்கு நம் முன்னோர் தரவில்லையே என்ற துயர்மிகுந்த ஆதங்கம் நம்மைத் துளைத்தெடுக்கிறது.

சிவபெருமான்தான் இதன் ஆசிரியன் என்கிறது “வர்ம காவியம்” என்னும் நூல். அகத்திய முனிவன்தான் இதன் ஆசிரியன் என்கின்றன சில பண்டைய செவிவழிச் செய்திகள். அகத்திய முனிவன் வர்மசாஸ்திரத்தை சமஸ்கிருத்தில் மட்டுமே எழுதியதாக மலையாளக்காரர்கள் வேறு வாதிடுகின்றனர். இவ்விரண்டு ஆசிரியர்கள் பற்றிய கூற்றும் உறுதி செய்யப்படாத வெறும் யூகங்கள் என்பதால் இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு நாம் பெருமை தேடிக் கொள்ளவோ உலக அரங்கில் பீடுநடை போட்டுப் பறைசாற்றி நிற்கவோ மார்தட்டிப் பேசவோ நம்மால் இயலாமற் போகிறது.

வர்ம நூல்களின் வரிசைகள்!

வேறு யார்தான் வர்மக்கலையின் ஆசிரியர்கள்? ஆளாளுக்கு நிறைய பாடல்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். அத்தனையும் விருத்த வடிவம் கொண்டவை. அவற்றுள்ளே நூற்றுக்கணக்கான சொற்பிழைகள். பொருள் முரண்பாடுகள். இடைச் செருகல்கள். இலக்கணத் தவறுகள். யாப்பிலக்கணச் சீர்கேடுகள். இலக்கணப் பிழையின்றி, இலக்கியத் தரம் குன்றாமல் எந்தவொரு வர்மநூலும் நம்மிடையே இல்லை. சித்தர்கள் மற்றும் முனிவர்கள் போர்வையில் பற்பலரும் அரைகுறை யாப்பிலக்கணத்தில் அடுக்கடுக்காய் எழுதி வைத்திருக்கும் இப்பாடல்கள் நமக்குப் பெருமை சேர்ப்பனவாக இல்லை. பவணந்தியின் “நன்னூல்” போலவோ, திருமூலரின் “திருமந்திரம்” போலவோ செந்தமிழ் மணம் வீசிடும் செய்யுள் நூலாக எந்தவொரு வர்மநூலும் தமிழில் இல்லை. வள்ளுவனையும் இளங்கோவையும் கம்பநாடனையும் காளமேகனையும் கைவசம் வைத்திருக்கும் நாம், வர்மநூலை எழுதியவனென்று பேர் சொல்லும்படியாக ஒரு பெரும்புலவனை அடையாளம் காட்ட முடியாத நிலையில் இருக்கிறோம் என்பது ஆற்றொணாத பெருங்குறை.

வர்ம சூத்திரம், வர்ம சூட்சுமம், வர்மப் பீரங்கி, வர்மக் கண்ணாடி என்று நமக்குக் கிடைத்துள்ள பலதரப்பட்ட வர்மநூல்களில் சில வர்மங்கள் ஒன்றுக்கொன்று முரணாக விளக்கப் பட்டிருப்பதும், சில வர்மங்கள் முற்றாக விடுபட்டிருப்பதும், சில இடங்களில் விருத்தங்கள் அரைகுறையாகவே காட்சியளிப்பதும், இந்த மாபெரும் கலைக்கு இழைக்கப்பட்டிருக்கும் களங்கம் என்றே கருதவேண்டியிருக்கிறது.

வள்ளுவனும் வர்ம நூலும்!

வள்ளுவன் காலத்தில்கூட வர்மம் மாண்புற்று விளங்கியிருக்க வேண்டும். அதற்கான சான்றுகள் திருக்குறளிலேயே போதிய அளவுக்குக் கிடைக்கின்றன. “நூல்” என்ற சொல்லைக் கையாளுகின்ற பெரும்பாலான இடங்களிலெல்லாம் வள்ளுவன் வர்மத்தையும் வைத்தியத்தையும் சுட்டிக் காட்டுவதாகத் தோன்றுகிறது. “ஏதிலார் நூல்” (குறள்: 440) என்றும் “நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று” (குறள்: 941) என்றும் எழுதுகிற வள்ளுவன், வர்மக் கலையையும் வர்ம நாடிகளையும் நேரடியாகவே சுட்டிக்காட்டுகிறான் என்பது கூர்ந்து நோக்கத் தக்கது. நமது வர்மச் சுவடிகளில் கூட “திறமான நூல் எவர்க்கும் வெளியிடாதே!” என்றும் “பொருள் வாங்கி நூலே ஈயே” என்றும் “நூல் தா என்று உன்னை ஏய்ப்பர்!” என்றும் காணப்படுகின்ற வரிகளில் “நூல்” என்ற சொல் நேரடியாக வர்மக் கலையைச் சுட்டிக்காட்டத்தான் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. எனவே வள்ளுவனும் அதே பொருளில் “நூல்” என்ற சொல்லைக் கையாண்டிருப்பதில் எந்த வியப்பும் இல்லை. ஒருவேளை வள்ளுவனே வர்மம் பற்றியும் ஓர் இலக்கியம் வடித்திருப்பானோ? நம் கைகளுக்கு அது கிடைக்காமற் போனதோ? யார் கண்டார்கள்!… மொத்தத்தில் வர்மக் கலையின் சூத்திரதாரியாக வள்ளுவன் உட்பட எந்தப் புலவனையும் சொந்தம் கொண்டாட முடியாத சோக நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பது உண்மை.

தமிழ் இனம் செய்யவேண்டியது என்ன?

தமிழன் விழிக்க வேண்டும். வர்மக் கலையின் உன்னத சக்திகளை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். ஆற்றல் மிக்க அடல்மறவரும் ஆசான்மாரும் வர்மப் புலவோரும் ஒருங்குகூடி, ஓர் உலகப் பொது வர்ம நூலை இலக்கண வளத்தோடும் இலக்கிய வனப்போடும் யாத்து, அதை அன்னைத் தமிழாள் மலரடிக்கு அர்ப்பணிக்க வேண்டும். அந்தக் கடமையினின்று தமிழன் தவறிட நேர்ந்தால், சரித்திரத்திலே தமிழ்ப் புலத்தின் வெற்றிச் செருக்கிற்கோர் சறுக்கல் விளைந்திடும் அபாயம் உண்டு.


Monday, September 29, 2008

திருமூலர்

திருமந்திரத்தில் நம் வாழ்வியலுக்குத் தேவையான பல உண்மைகள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
அதில் கலவி பற்றி அவர் சொல்கின்ற சில செய்திகளில் உண்மை.

               குழவியும் ஆணாம் வலத்தது வாகில்

               குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்

              குழவியும் இரெண்டாம் அபான னெதிர்க்கில்

              குழவியும் அலியாகும் கொண்டகால் ஒக்கிலே

என்கிறார் அதாவது கலவியின் போது ஆணினுடைய மூச்சு வலது பக்கமாக வெளிப்படுமெனில் குழந்தை ஆணாகப் பிறக்குமென்றும், இடப்பக்கமாக இருக்குமெனில் பெண்ணாக இருக்குமென்றும், இரெண்டு மூக்கிலும் வெளிப்பட்டால் பாலியல் குறைபாடோடு பிறக்குமென்றும் குறிப்பிடுகிறார்.

மருத்துவத்தின் படி குழந்தையின் பாலை நிர்ணயிக்கும் x, y குரோமோஸோம்கள் ஆணிடத்தில் இருந்துதான் உருவாகிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு செய்தி. அப்படி இருக்க திருமூலரின் பாடலிலும் உண்மை உண்டென்றால் 
நமது தொன்மையான இலக்கியங்களுள் இருக்கின்ற நல வாழ்வு தத்துவங்களை நாம் ஏன் அறிவியல் பூர்வமாக நிறுவக்கூடாது? 
இன்னும் திருமந்திரத்தில் குழந்தை ஊனமாகப் பிறப்பது குறித்தும், குழந்தையின் ஆயுள் நிர்ணயிக்கும் நேரம் குறித்தும்
 
பல கருத்துகள் உள்ளது.  ஏன் அதை தெரிந்து வைத்துக் கொள்ளக்கூடாது என்பது தான் என் கருத்து…. நீங்க எப்படி?


Sunday, September 28, 2008

நோய் தடுப்பு

சித்தர் என்ற சொல்லுக்குச் சித்தமானவர்கள் என்றும் பொருள் உண்டு. அவர்கள் அறிவியலை ஞானமாக்கியவர்கள். அவர்கள் மனித வாழ்க்கைக்குச் சித்தமானதைக் கண்டு சொன்னார்கள். உணவை உண்பதில் மருத்துவம் சார்ந்த நெறிமுறைகளை ஏற்படுத்தினார்கள். சுகவாழ்வுக்காக அறிவியல்ரீதியான சில வழக்கங் களை ஏற்படுத்தினார்கள்.
அவ்வாறு வந்தது தான் மனிதனின் தலைமுடி அளவு குறைவாய் இருத்தல் என்பது ஆரோக்கியமானது என்பது அவர்களின் கண்டுபிடிப்பு. மேலைநாடுகளில் பெரும்பாலான ஆண்கள் தலையில் அதிக முடியையும் பெரிய மீசையையும் வைப்பதே இல்லை.
ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்கு அநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.
பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இந்நோய் வரும் என்பதால் அவர்கள் அரைஞாண் கயிறு கட்டுவதில்லை.தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிக அவசியம் எனக் கண்டவர்கள் பழந்தமிழர்கள். தாய்ப்பாலைத் தவிர வேறு எந்தப் பாலுமே அதற்கு ஈடாகாது. இன்றைக்கு மேல்நாடுகளில் தாய்ப்பால் குந்தைகளுக்குக் கொடுக்கும்படி வலியுறுத்தி வருகின்றார்கள். ஆடும், மாடும், நாயும் தாய்ப் பாலைத் தம் குட்டிகளுக்குக் கொடுக்கிறபோது மனிதர் மட்டும் ஏன் மாற்றுப்பால், மாட்டுப்பால் தேடுகின்றனர்.
நன்றி! மீண்டும் வருக!!!

were are u from